Colombo (News 1st) களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம் 6 வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணிகள் காரணமாக நேற்று (17) முதல் 6 வாரங்களுக்கு மின்னுற்பத்தி நிலையம் மூடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதனால் தேசிய மின்கட்டமைப்புக்கு 165 மெகாவாட் மின் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயலிழந்த நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்தின் இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரத்தை செயற்படுத்த சுமார் 05 நாட்கள் செல்லுமென மின்சார சபை எதிர்வுகூறியுள்ளது.
மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின் பிறப்பாக்கியில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, நேற்று முதல் மின் உற்பத்தியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதனால் தேசிய மின் கட்டமைப்பிற்கு 300 மெகாவாட் மின் இழப்பு ஏற்பட்டுள்ளது.
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரமும் தற்போது செயலிழந்து காணப்படுகின்றது.
பராமரிப்பு காரணங்களுக்காக மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் தேசிய மின் கட்டமைப்பிற்கு 300 மெகாவாட் மின் இழப்பு ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், மின் விநியோகத்தில் எவ்வித இடையூறும் ஏற்படாது என மின்சார சபை உறுதிப்படுத்தியுள்ளது.
தொடர்ந்து நீர் மின் உற்பத்தி இடம்பெறுவதுடன், மின் விநியோகம் இடம்பெற்று வருவதாகவும் மின்சார சபை அறிவித்துள்ளது.
நீர் மின் நிலையங்களுடன் தொடர்புடைய நீர் நிலைகளின் நீர் கொள்ளளவு 88 வீதமாக அதிகரித்துள்ளது.