Colombo (News 1st) மழையுடன் கூடிய வானிலை இன்று(14) முதல் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வடக்கு, கிழக்கு, வடமேல், ஊவா, மேல், தென் மாகாணங்களில் மற்றும் நுவரெலியா, மாத்தளை மாவட்டங்களில் கன மழை எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, நில்வலா ஆற்றுப்படுகை தொடர்பில் வௌியிடப்பட்ட வௌ்ள அபாய எச்சரிக்கை இன்று(14) மாலை வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதனால் நில்வலா கங்கைக்கு அருகில் வசிக்கும் மக்கள் மற்றும் அப்பகுதியிலுள்ள வீதிகளை பயன்படுத்துவோர் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக தெற்கு அதிவேக வீதியின் கொக்மாதுவ இடைமாறலின் கனங்கே வரையான பகுதியில் தொடர்ந்தும் வாகனப் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
வெள்ளத்தினால் மட்டகளப்பு, புலிபாய்ந்த கல் பாலத்தின் ஊடான போக்குவரத்து முற்றுமுழுதாக தடைப்பட்டுள்ளது.
கிரான் பாலத்தின் ஊடான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் கூறினார்.
இதேவேளை, சித்தாண்டி சந்தனமடு ஆறு பெருக்கெடுத்ததன் காரணமாக சித்தாண்டியை அண்மித்த கரையோர பிரதேசங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
இதேவேளை, மழையுடனான வானிலையால் 09 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
பதுளை, களுத்துறை, கண்டி, இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை, கேகாலை, குருணாகல், மாத்தறை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலுள்ள பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
நிலவும் மழையுடனான வானிலையால் 552 குடும்பங்களைச் சேர்ந்த 1852 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.