Colombo (News 1st) பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த 297 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்பிரிவில் பட்டியலிடப்பட்டிருந்த 42,248 பேரில், 297 சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் போதைப்பொருள் தொடர்பில் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 130 பேரும் அடங்குகின்றனர்.
ஏனைய குற்றங்கள் தொடர்பில் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 154 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைரேகை பதிவுகளின் மூலம் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர் குற்றங்களுடன் தொடர்புடைய 9 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல்வேறு குற்றங்களுக்காக தேடப்பட்டு வரும் 42,248 சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் அண்மையில் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.