Colombo (News 1st) வடக்கு மற்றும் கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடையில் இன்று(11) மற்றும் நாளைய(12) தினங்களில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.
நல்லிணக்க பொறிமுறைகள், காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினை, காணி விடுவிப்பு மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று(11) மாலை இந்த பேச்சுவார்த்தை ஆரம்பமாகவுள்ளது.
இந்த பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ள டெலோ மற்றும் புளொட் கட்சிகள் தீர்மானித்துள்ளன.
இனப் பிரச்சினைக்கு தீர்வு – சமஷ்டி என்ற அடிப்படையிலேயே இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதாக புளொட் எனப்படும் தமிழ் மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.
பேச்சுவார்த்தையின் போது வட மாகாண அபிவிருத்தி மற்றும் ஏனைய பிரச்சினைகள் குறித்து ஆராயவுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார்.
இதேவேளை, நாளை(12) அதிகாரப்பகிர்வு தொடர்பில் கலந்துரையாட ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கூறியுள்ளார்.
ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு கிடைத்துள்ள போதிலும், அதில் பங்கேற்கப் போவதில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் நேற்று முன்தினம்(09) நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முழு ஆதரவை வழங்குவதாகவும் வடக்கு, கிழக்கின் அதிகாரப் பகிர்வு மற்றும் காணிப் பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படும் இந்த பேச்சுவார்த்தையில் முஸ்லிம் பிரதிநிதிகள் உள்வாங்கப்பட வேண்டும் எனவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.