வட மாகாண வைத்தியர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
முறையற்ற வரி விதிப்பு, சம்பளம் அதிகரிக்கப்படாமை, வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றமைக்கு எதிரான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தாமை உள்ளிட்ட காரணங்களை முன்னிறுத்தி இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.
வட மாகாணத்தின் பல்வேறு வைத்தியசாலைகளில் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள், வைத்தியசாலையின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாகக் கூடி இன்று காலை ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன்போது, தமது கோரிக்கைகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை வைத்தியசாலைக்கு வருகை தந்த பொதுமக்களுக்கு வைத்தியர்கள் விநியோகித்தனர்.
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்களும் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மல்லாவி ஆதார வைத்தியசாலையிலும் வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கின்றது.
மல்லாவி ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைகள் தவிர்ந்த ஏனைய சிகிச்சைகள் இடம்பெறவில்லை எனவும், மகப்பேற்று மருத்துவ சேவைகள், சிறுவர் மருத்துவ சேவைகள், புற்றுநோய் சிகிச்சைகள், சிறுநீரக நோய்களுக்கான சிகிச்சைகள் இடம்பெறுவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், வைத்தியசாலைக்கு சென்ற ஏனைய நோயாளர்கள் இன்று பல்வேறு இன்னல்களை சந்தித்தனர்.
மாகாண ரீதியில் இந்த பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்திருந்ததுடன், ஊவா மாகாணத்தில் இந்த பகிஷ்கரிப்பு நேற்று ஆரம்பிக்கப்பட்டது.
பதுளை மற்றும் வெலிமடை பகுதிகளிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளையும் உள்ளடக்கி நேற்று காலை 08 மணிக்கு ஆரம்பமான பணிப்பகிஷ்கரிப்பு இன்று காலை 08 மணியுடன் நிறைவு பெற்றதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் டொக்டர் ச்சமில் விஜேசிங்க தெரிவித்தார்.
இன்றைய தினம் வட மாகாணத்தை தவிர வேறு எந்தவொரு மாகாணத்திலும் வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவில்லையெனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, 2018 தாதியர் டிப்ளோமாதாரிகளின் ஒன்றியத்தினரால் இரத்தினபுரி நகரில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இரத்தினபுரி நகர மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக சுமார் ஒரு மணித்தியாலமாக இந்த போராட்டம் இடம்பெற்றது.
தமக்கான நியமனத்தை வழங்குமாறு வலியுறுத்தி தாதியர் டிப்ளோமாதாரிகளினால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.