Colombo (News 1st) ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தை கோப் குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்று(14) பிற்பகல் 02 மணிக்கு முன்னிலையாகுமாறு ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர், பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் சிக்கல்கள் காணப்படுமாயின், அது தொடர்பில் கோப் குழுவிற்கு அறிவிக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிற்கு கடந்த 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.
அதற்கமைய, ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தை கோப் குழுவிற்கு இன்று அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளது.
இதனிடையே, ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்ட இடைக்கால நிர்வாகக் குழுவிற்கு அண்மையில் விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையுத்தரவை நீக்குமாறு கோரி, விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தமது சட்டத்தரணியின் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆட்சேபனை மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.