அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை மிரட்டும் வகையில் வடகொரியா, இன்று காலை கிழக்கு கடற்கரையில் குறுகிய தூரம் சென்று தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை செலுத்தி சோதனை நடத்தியுள்ளது.
இன்று காலை 7.44 மணிக்கு இரண்டு ஏவுகணைகளை ஒரே நேரத்தில் சோதனை நடத்திய நிலையில், 37 நிமிடங்கள் கழித்து மேலும் ஒரு ஏவுகணை சோதனை நடத்தியதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. ஜப்பானை ஒட்டியுள்ள கடற்கரையில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருவது அந்நாட்டுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரியா நடத்தும் ஏவுகணை சோதனையின்போது ஏவுகணைகள் கொரிய தீபகற்பத்துக்கும், ஜப்பான் கடல் பகுதிக்கும் இடையில் விழுகின்றன. இது அனைத்தும் ஜப்பான் பொருளாதார மண்டத்துக்கு வெளியில்தான் நடக்கிறது.
இதனால் ஜப்பானுக்கு சேதமேற்படவில்லையென பாராளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்திருந்தார். ஆனால், வடகொரியாவின் தொடர் சோதனை நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு மிரட்டல் என அவர் கூறவில்லை.
அதேவேளையில் ஐ.நா. பாதுகாப்பு சபை தீர்மானத்தை மீறுவதாக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இன்று காலை ஏராளமான ஏவுகணைகளை வடகொரியா பரிசோதனை செய்ததை கண்டறிந்துள்ளோம் என தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இது கொரிய தீபகற்பத்தின் அமைதிக்கு மிரட்டல் எனவும் தெரிவித்துள்ளது. அமெரிக்கா உதவியுடன் எந்தவொரு செயலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.
மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் சென்று 300 முதல் 350 கிலோமீற்றர் தூரம் வரையிலான இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை சோதனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 11 நாட்கள் கொண்ட அமெரிக்கா-தென்கொரியா கூட்டு இராணுவ பயிற்சி கடந்த வியாழக்கிழமை முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.