பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன் தனக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதாகவும் அதற்காக கீமோதெரபி சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
தற்போது பிரிட்டன் மன்னராக உள்ள இரண்டாம் சார்லஸ் மற்றும் மறைந்த இளவரசி டயனா தம்பதியின் மூத்த மகன் இளவரசர் வில்லியம்ஸ். இவரது மனைவி இளவரசி கேட் மிடில்டன். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இளவரசி கேட் மிடில்டனும் இளவரசர் வில்லியம்ஸுக்கும் இடையே பிரச்சனை என தகவல் வெளியானது.
இளவரசி கேட் மிடில்டனும் நிகழ்ச்சிகள் எதிலேயும் பங்கேற்காமல் இருந்து வந்தார். இதனால் ஏதேதோ வதந்திகள் உலா வந்தன. இந்நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் கேட் மிடில்டன். அதில் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரியில் வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்றும் அப்போது புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என எனது மருத்துவக் குழு அறிவுறுத்தியதாகவும், இப்போது ஆரம்ப கட்ட சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தங்கள் குடும்பத்தின் நலன் கருதி இது குறித்த விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என்றும் புற்றுநோய் பாதிப்பு குறித்த தகவல் தனக்கும் தனது கணவருக்கும் பெரும் அதிர்ச்சி அளித்ததாகவும் தெரிவித்துள்ளார். அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வர தனக்கு அவகாசம் தேவைப்பட்டது என்றும் கேட் மிடில்டன் தெரிவித்துள்ளார்.
மேலும் தான் நலமுடன் உள்ளதாகவும், மனதளவிலும் உடல் அளவிலும் வலிமை அடைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். சமீபத்தில்தான் மன்னர் இரண்டாம் சார்லஸுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இளவரசி கேட் மிடில்டனுக்கும் புற்றுநோய் பாதிப்பு இருப்பது அரச குடும்பத்தினரையும் அரச குடும்ப அபிமானிகளையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.