Sangathy
India

“பாதி தமிழன் சீமானே புலிக்கொடியை வெச்சிருக்காரு”.. நாங்கள் வைக்கக் கூடாதா..? : வீரலட்சுமி பாய்ச்சல்..!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை தொடர்ந்து சீண்டி வரும் தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி, தற்போது மீண்டும் அவரை வம்பிழுத்து இருக்கிறார். சீமானை பாதி தமிழர் என்றும், அவரது கட்சிக் கொடியில் இருப்பது புலி அல்ல பூனை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில், அவரை பெங்களூரில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்து சீமான் மீது புகார் பதிவு செய்ய உறுதுணையாக இருந்தவர் வீரலட்சுமி. வீரலட்சுமியும், விஜயலட்சுமியும் சீமானுக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தி வந்த நிலையில், திடீரென தனது புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டு பெங்களூருக்கே சென்று விட்டார் விஜயலட்சுமி. இதையடுத்து, வீரலட்சுமி – விஜயலட்சுமி இடையேயே வார்த்தை மோதல் எல்லை மீறிச் சென்றது வேறு கதை.

விஜயலட்சுமி சென்றுவிட்ட போதிலும், தொடர்ந்து சீமானை வம்புக்கு இழுப்பதையே முழுநேர வேலையாக செய்ய ஆரம்பித்தார் வீரலட்சுமி. சீமானை பற்றி ஒருமையில் தரக்குறைவாக பேசுவது, தனது கணவனுடன் பாக்சிங் செய்யுமாறு சவால் விடுப்பது என வீரலட்சுமியின் செயல்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது.

இந்நிலையில், தனது தமிழர் முன்னேற்றப் படை அமைப்பை, அரசியல் கட்சியாக மாற்றும் நடவடிக்கையில் வீரலட்சுமி ஈடுபட்டு வருகிறார். இதற்காக புலி படத்துடன் கூடிய ஒரு கொடியையும் அவர் அறிமுகப்படுத்தியுள்ளார். ஏற்கனவே, சீமானின் நாம் தமிழர் கட்சியில் புலி படம் இருக்கும் போது, வீரலட்சுமியின் கொடியிலும் புலி படம் இருப்பது நிருபர்கள் பற்றி அவரிடம் கேள்வியெழுப்பினர்.

அதற்கு பதிலளித்து வீரலட்சுமி கூறுகையில்,

“சமூக பிரச்சினைகளுக்காகவும், மக்கள் பிரச்சினைகளுக்காகவும் எனது 17 வயது முதல் தினம் தினம் போராட்டம் நடத்தி வருபவள் தான் இந்த வீரலட்சுமி. இப்படி மக்கள் பிரச்சினைகளுக்காக தினம் தினம் நீதிமன்ற வாசலில் ஏறி இறங்கி வருகிறேன். அதனால் மக்களின் ஓட்டுகளை வாங்கி எம்எல்ஏ, எம்.பிக்களாக ஆகி, மக்களுக்கு சேவை செய்யும் ஆசை எங்களுக்கு வந்துள்ளது.

அதனால் எங்கள் தமிழர் முன்னேற்றப் படை அமைப்பை அரசியல் கட்சியாக நாங்கள் மாற்றி இருக்கிறோம். எங்கள் கட்சிக் கொடியை அறிமுகம் செய்துள்ளோம். எங்கள் கொடியிலும் புலி இருக்கிறது.. சீமானின் நாதக கொடியிலும் புலி இருக்கிறது என என்னிடம் சிலர் கேட்கிறார்கள்.

முதலில் நாம் தமிழர் கொடியில் இருப்பது புலியே கிடையாது. அது பூனை. இருந்தாலும் அதை புலி என்று சீமான் கூறி வருகிறார். அப்படியே இருந்தாலும், புலி என்பது சோழர்களின் சின்னம். அதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அது ஒன்றும் சீமானுக்கு மட்டுமே சொந்தம் கிடையாது. அதுமட்டுமல்லாமல், பாதி தமிழனான சீமானே, சோழர்களின் புலி சின்னத்தை பயன்படுத்தும் போது, பச்சை தமிழச்சியான நான் பயன்படுத்தக் கூடாதா?” என்று வீரலட்சுமி கேள்வியெழுப்பினார்.

Related posts

பாராசிட்டமால் உட்பட 52 மருந்துகள் தரமற்றவை : ஆராய்ச்சியில் அதிர்ச்சி..!

tharshi

டெல்லி ஆழ்துளை கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட இளம் ஆணின் சடலம்..!

Lincoln

கமல்ஹாசன் 7 ஆம் திகதி அவசர ஆலோசனை : தொகுதி பங்கீடு சிக்கல் தீருமா..!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy