அமெரிக்காவும் ஈரானும் அடுத்த வாரம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் மீண்டும் பேச்சில் ஈடுபடவுள்ளன என்று ‘தி வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில்,
‘அமெரிக்காவும் ஈரானும் ஒரு மாத காலம் பேச்சில் ஈடுபடுவதற்கான திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்கான 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உருவாக்கும் பணியில் இரு தரப்பும் மத்தியஸ்தர்கள் மூலம் ஈடுபட்டு வருகிறார்கள். ஈரானின் அணுசக்தி திட்டம், ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் பதற்றத்தைக் குறைத்தல், ஈரானிடம் இருக்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை மற்றொரு நாட்டுக்கு மாற்றுவது உள்ளிட்ட அம்சங்களை அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அமெரிக்கா சேர்த்துள்ளது.
இதேபோல், அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்களை ஈரான் இணைத்துள்ளது. இது பேச்சுகளின் முன்னேற்றத்தைத் தாமதப்படுத்தலாம் என பேசப்படுகிறது’ என தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வேர்ஜீனியாவில் நேற்றிரவு செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ‘மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள திட்டம் தொடர்பாக ஈரானிடம் இருந்து இன்று – மே 9ஆம் திகதி இரவு பதில் வரும் என்று எதிர்பார்க்கிறோம். இதற்கான செயல்முறையை ஈரான் வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறதா என்பது உறுதியாகத் தெரியவில்லை. விரைவில் தெரிந்துவிடும்’ என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி ஈரான் மீது தாக்குதலை தொடங்கின. இதற்கு ஈரான் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. இதையடுத்து பாகிஸ்தான் மேற்கொண்ட மத்தியஸ்தம் காரணமாக ஏப்ரல் 8ஆம் திகதி போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 11ஆம் திகதி இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா – ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. எனினும்இ இந்த பேச்சில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
இதன் பின்னர் போர் நிறுத்தத்தை டொனால்ட் ட்ரம்ப் திகதி குறிப்பிடாமல் நீட்டித்தார். அதேநேரத்தில், ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க கடற்படை தொடர்ந்து முற்றுகையிட்டு வருகிறது.
