போர் நிறுத்தம் நடைமுறையில் உள்ள நிலையில் ஈரான்மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் தெற்கு ஈரானில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஏவுகணை தளங்கள், இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் படகுகள் தாக்கப்பட்டன.
இந்த் தாக்குதல் ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே உள்ள கடல் பகுதியை ஒட்டி நடந்துள்ளது. இதை அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவு உறுதி செய்துள்ளது.
“எங்கள் படை வீரர்களின் தற்காப்புக்காக ஹோர்முஸ் நீரிணையை ஒட்டி முகாமிட்டிருந்த ஈரான் படையின் இராணுவ தளபாடங்கள், ஏவுகணை தளங்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவு செய்தித் தொடர்பாளர் ரிம் ஹொக்கின்ஸ் தெரிவித்துள்ளார்.
போர்நிறுத்த கட்டுப்பாடுகளை பின்பற்றி அமெரிக்க இராணுவத்தினரின் தற்காப்புக்காக மட்டுமே இந்த தாக்குதல் நடந்தது. கடலில் கண்ணிவெடிகளை நூதன முறையில் பதிக்க முயன்ற ஈரான் தரப்பை தாக்கியதாக அமெரிக்கா குற்றச்சாட்டு வைத்துள்ளது. இந்தப் பணியில் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் படகுகள் பயன்படுத்தப்பட்டன என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தெற்கு ஈரான் கடலோர பகுதியில் தாக்குதல் நடந்துள்ளதை அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் உறுதி செய்தன.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையில் அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தத் தாக்குதலை அமெரிக்கா தொடுத்துள்ளது.
இதே நேரத்தில் ஈரான் வசம் உள்ள யுரேனியத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
