திருமணத்துக்கு தடையாக இருந்ததாகக் கூறி ஒன்றரை வயது குழந்தையை அடித்துக் கொன்ற கொடூர சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது.
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தின் ஃபிரோசாபாத் மாவட்டத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குழந்தையின் தாய்க்கும் அவரது அத்தை மகனுக்கும் இடையே நெருங்கிய பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அவர் பெண்ணிடம் வற்புறுத்தியுள்ளார். எனினும், தனது குழந்தையைக் காரணம் காட்டி அந்தப் பெண் அதனைத் தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ரொபி வாங்கித் தருவதாகக் கூறி குழந்தையை அழைத்துச் சென்ற சந்தேகநபர், வழியிலேயே குழந்தையை தரையில் பலமுறை அடித்துள்ளார். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டதை அடுத்து, குழந்தையை வீதியில் வீசிவிட்டு அவர் தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரை கைது செய்ய முற்பட்டபோது, அவர் பொலிஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து, பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவரது காலில் காயம் ஏற்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலை சம்பவம் தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
குறித்த பெண் ஏற்கனவே திருமணமாகி, விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
