இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா இயக்கிவரும் ‘கில்லர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் வாயு சிலிண்டர் வெடி விபத்தில் சிக்கி தொழில்நுட்பக் கலைஞர் ஒருவர் உயிரிழந்தார். அத்துடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர் என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவின் சென்னை ஒட்டேரி பகுதியில் உள்ள பி அண்ட் சி மில் வளாகத்தில் இன்று புதன்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த போது, அங்கு வைக்கப்பட்டிருந்த பலூன் வாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து ஒட்டேரி பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘இசை’ திரைப்படத்துக்குப் பிறகு, எஸ்.ஜே.சூர்யா மீண்டும் இயக்குநராக களமிறங்கும் இத்திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
பிரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு, விபத்தினால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
