எரிபொருட்களின் விலைகள் உயர்வடைந்த நிலையில், பேருந்து கட்டணத்தை அதிகரிக்க முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்தது. இதனால், நாளை திங்கட்கிழமை முதல் போக்குவரத்து சேவை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே நடைபெறும் என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இன்று – ஜூன் 7ஆம் திகதி கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜயரத்ன மேற்சொன்னவாறு கூறினார்.
மேலும், தற்போது 25 வீதமான பேருந்துகள் தன்னார்வமாக சேவையிலிருந்து விலகியுள்ளன. இந்தநிலையில், தனியார் பேருந்து சேவையை 50 வீதத்தால் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
பேருந்துகளை இயக்குவதற்கான செலவு அதிகரித்து வரும் நிலையில் சேவையை தொடர முடியாது. தற்காலிக நிவாரணம் மற்றும் கட்டண திருத்தத்தை செய்யுமாறு அரசாங்கத்தை கோரியிருந்தோம். அதற்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை.
முக்கியமான பயண நேரங்களில் மாத்திரமே இனி பேருந்துகள் இயக்கப்படும். காலை, மாலை வேலை நேரப் பயணங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். சில வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்து பயணங்களின் எண்ணிக்கையும் குறைக்கப்படும் என்றும் அவர் மேலும் சொன்னார்.
