மலேசியாவின் கிளாந்தான், தும்பாட் பகுதியில் உள்ள கம்போங் புனோஹான் கிராமத்தில் பொதுப் படையினரும் (GOF) வனவிலங்கு மற்றும் தேசிய வனவிலங்கு மற்றும் பூங்காக்கள் துறையினரும் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், சுமார் 20,000 ரிங்கிட் மதிப்புள்ள அரிய வகை செம்பருந்து (Red Eagle) உள்ளிட்ட பல வனவிலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
நேற்று மதியம் 3.15 மணியளவில் நடத்தப்பட்ட இந்த சோதனையின்போது, அங்கிருந்த 18 வயது மதிக்கத்தக்க உள்ளூர் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் மற்றும் கூண்டுகளின் மொத்த மதிப்பு 48,500 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று, தென்கிழக்கு மண்டல பொது இயக்கப் படையின் தளபதி எஸ்.ஏ.சி அகமது ராட்ஸி ஹுசைன் தெரிவித்தார்.
“அந்த வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு செம்பருந்து, நான்கு காடைக் கோழிகள் (White-breasted Waterhen), ஒரு சுடுகாட்டு ஆந்தை (Burung Hantu Carik Kafan), இரண்டு புனுகுப் பூனைகள் (Musang Pandan / Giant Flying Foxes) மற்றும் ஐந்து பெரிய கூண்டுகள் கண்டறியப்பட்டன.”
“பாதுகாக்கப்பட்ட இந்த வனவிலங்குகளை வளர்ப்பதற்கோ அல்லது வைத்திருப்பதற்கோ உரிய அதிகாரப்பூர்வ உரிமம் எதையும் அந்த இளைஞர் சமர்ப்பிக்கத் தவறியதைத் தொடர்ந்து அவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்,” என்று அவர் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்ட இளைஞரும், பறிமுதல் செய்யப்பட்ட விலங்குகளும் மேல் விசாரணைக்காக கிளாந்தான் ‘பெர்ஹிலிதான்’ துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் 2010 வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் (சட்டம் 716), பிரிவு 60-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
முதற்கட்ட விசாரணையில், அந்த விலங்குகள் அனைத்தும் குவா மூசாங்கில் இருக்கும் தனது தந்தைக்குச் சொந்தமானவை என்றும், தான் அவற்றை வெறும் பராமரிப்பு மட்டுமே செய்து வந்ததாகவும் அந்த இளைஞர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
