கடந்த ஞாயிற்றுக்கிழமை மலாக்கா அலோர் காஜா லெண்டு ரக்கான் மூடா பாடாங் காம்ப்ளெக்ஸ் மைதானத்தில் நடைபெற்ற காற்பந்து போட்டியின்போது, 28 வயதுடைய காற்பந்து வீரர் ஆர். தனேஷ், மின்னல் தாக்கி உயிரிழந்தார். மேலும் அச்சம்வத்தில் போட்டி நடுவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
போட்டி தொடங்கிய சுமார் 10 நிமிடங்களில் லேசான மழை பெய்ததைத் தொடர்ந்து மின்னல் மின்னி இடி முழங்கியது. அப்போது தனேஷ் மற்றும் மேலும் இருவர் மைதானத்தில் சரிந்து விழுந்தனர்.
மயக்கநிலையில் அலோர் காஜா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட தனேஷ், அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றபோது உயிரிழந்தார். காயமடைந்த நடுவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் மற்றொருவர் நலமாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனேஷின் உடலில் இடது கால் முதல் தொடை வரை தீக்காயங்கள், வயிற்றுப் பகுதியில் கருகிய காயம், முதுகில் கருமையான தடயங்கள் மற்றும் வலது காதில் இரத்தக்கசிவு இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
