பிரான்ஸில் யூதர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இருந்து இராணுவ தரத்திலான ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பிரெஞ்சு பயங்கரவாத எதிர்ப்பு வழக்கறிஞர்கள் நேற்று விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
பாரிஸின் வடக்கே உள்ள சார்செல்ஸ் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்று இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கள ஆய்வுகளை மேற்கொண்டனர். இதன்போது அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்றில் இருந்து இராணுவத் தரத்திலான ஆயுதங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்து 300 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அத்துடன் இந்த சம்பவம் பயங்கரவாத செயலாக வகைப்படுத்தப்பட்டு, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அந்த வாகனத்தில் இருந்து தாக்குதல் ரக துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
