செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரியும், அகழ்வுப் பணிகளைத் தடையின்றித் தொடர வலியுறுத்தியும் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக நேற்று வியாழக்கிழமை கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
‘நீதிக்கான மக்கள் சக்தி’ அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
“செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணிகள் தடையின்றி தொடர வேண்டும்” மற்றும் “காணாமல் போன உறவுகளுக்கு நீதி வேண்டும்” போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டவர்கள்,”செம்மணி இனப்படுகொலையின் சாட்சி”, “செம்மணிக்கு நீதி வழங்கு!”, “தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்” மற்றும் “செம்மணி மனிதப் புதைகுழியின் உண்மையை வெளிக்கொணர்ந்து நீதியை நிலைநாட்டுங்கள்” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகள் மற்றும் மனித எலும்புக் கூடுகள் பொறிக்கப்பட்ட பெரிய பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர்.
