ஈரானில் பாலியல் தாக்குதலுக்கு முயன்ற ஒருவரிடமிருந்து தற்காப்புக்காகச் செயல்பட்டார் எனக் கூறி 23 வயதான பெண் ஒருவர் தூக்கிலிடப்பட்டுள்ளார். அந்தத் தண்டனை 2026 ஓகஸ்ட் 8 ஆம் திகதி அதிகாலை கஸ்வின் மத்திய சிறையில் நிறைவேற்றப்பட்டது.
குடும்ப அழுத்தத்தின் காரணமாக தனது 17ஆவது வயதில் திருமணம் செய்துகொண்டார் எனக் கூறப்படும் மர்ஸியே நெய்ரி என்ற பெண் 2021 ஒக்ரோபரில் தனக்கு 18 வயதாக இருந்தபோது, மதுபோதையில் இருந்த தனது கணவரின் கூட்டாளி ஒருவர் தன்னை பாலியல் ரீதியாகத் தாக்க முயன்றார் எனத் தெரிவித்திருந்தார்.
அப்போது தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக சமையலறைக் கத்தியைப் பயன்படுத்தினார் எனவும், அச்சமயம் ஏற்பட்ட மோதலில் அந்த நபரும் தனது கணவரும் உயிரிழந்தனர் எனவும் அவர் நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.
சம்பவத்துக்குப் பின்னர் சில நாட்களில் அதிகாரிகளிடம் சரணடைந்த அவர், தனது செயல் தற்காப்புக்காக மேற்கொள்ளப்பட்டது என வாதிட்டபோதும், ஈரான் நீதிமன்றங்கள் அந்த வாதத்தை ஏற்கவில்லை.
இதையடுத்து, ஈரானின் ‘கிசாஸ்’ எனப்படும் பழிக்குப் பழி சட்ட நடைமுறையின் கீழ் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 2026ஆம் ஆண்டில் இதுவரை ஈரானில் தூக்கிலிடப்பட்ட பெண்களின் எண்ணிக்கை குறைந்தது 14 ஆக உயர்ந்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
தன்னை பாலியல் ரீதியாகத் தாக்க முயன்ற ஒருவரைக் கொன்றதாகக் கூறப்பட்ட வழக்கில் 2014ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்ட ரெய்ஹானே ஜப்பாரியின் வழக்குடன் நெய்ரியின் வழக்கும் ஒப்பிடப்படுகிறது.
ஈரானின் இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தில் ‘கிசாஸ்’ உள்ளிட்ட நடைமுறைகள் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் சட்டப் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
இருப்பினும், நெய்ரி பாலியல் தாக்குதலுக்கு உள்ளானார் என்பது நீதிமன்றத்தால் நிரூபிக்கப்படவில்லை ஆனால் அவர் முன்வைத்தது தற்காப்பு வாதம் என்று செய்திகள் கூறுகிறது
