செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் நிறைவடைந்த பின்னர், அது தொடர்பான விடயங்கள் நீதிமன்றத்துக்கு அறிக்கையிடப்படும் என்றும், சாட்சியாளர்களிடம் நீதிமன்றத்தின் ஊடாகவே விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (18) கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது செம்மணி மனிதப் புதைகுழியில் தற்போது இடம்பெற்று வரும் அகழ்வுப் பணிகள், எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் மரண தண்டனை கைதி லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவிடம் சாட்சியங்களைப் பெறுவது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 500 இற்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அகழ்வுப் பணிகள் நாளை (19) புதன்கிழமை வரை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அகழ்வுப் பணிகள் தொடர்பான விடயங்கள் நீதிமன்றத்துக்கு அறிக்கையிடப்படும் எனவும், சாட்சியாளர்களிடம் விசாரணைகள் நீதிமன்றத்தின் ஊடாகவே மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
