ரஷ்யாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட ஜெய்சங்கர், மொஸ்கோவில் உள்ள கிரெம்ளின் மாளிகையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினைச் சந்தித்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட செய்தியை வழங்கிப் பேசினார்.
இந்தச் சந்திப்பின் போது, வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார ஒத்துழைப்புக்கான 27ஆவது இந்தியா-ரஷ்யா அரசாங்கக் குழு (IRIGC-TEC) கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் குறித்தும் பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்தும் புடினிடம் அவர் விளக்கினார்.
சந்திப்பின் தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் நல்வாழ்த்துகளை புடினுக்குத் தெரிவித்த ஜெய்சங்கர், இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தகம், எரிசக்தி, உர விநியோகம், அணுசக்தி உள்ளிட்ட பல துறைகளில் கணிசமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும், வரவிருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி , புடினைச் சந்திக்க ஆவலுடன் இருப்பதாகவும், இந்தியாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டிற்கு அவரை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைவதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உடன் இருதரப்பு ஒத்துழைப்பு, பிராந்திய பதற்றங்கள், உலகளாவிய சவால்கள் மற்றும் பலதரப்பு விவகாரங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தியதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் நடைபெற்ற இருதரப்பு சந்திப்புக்குப் பிறகு ‘X’ பக்கத்தில் பதிவிட்ட ஜெய்சங்கர்,
“ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உடன் விரிவான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. இதில் இருதரப்பு ஒத்துழைப்பு, பிராந்திய சவால்கள் மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
