நேபாளம் பேரழிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 903 ஆக அதிகரித்துள்ளது. 4,200 பேர் காணாமல் போயுள்ளனர். நேபாளத்தில் உள்ள ஒரு புத்தர் கோயிலில் ஏற்பட்ட 20 நிமிட தாமதமே, தங்களின் உயிரைக் காப்பாற்றியதாக இந்தியா கேரளாவைச் சேர்ந்த 31 பயணிகள் தெரிவித்துள்ளனர்.
பெண்கள், குழந்தைகள், முதியோர் என பல்வேறு வயதினர் அடங்கிய இந்தக் குழுவினர் பயணத்தின்போது பெண்களின் கோரிக்கையின் பேரில், அந்த புத்தர் கோயிலில் சுமார் 20 முதல் 25 நிமிடங்கள் இருந்துள்ளனர்.
இந்த தாமதம்தான் அவர்களின் உயிரைக் காப்பாற்றியது என அக்குழுவைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.
“இந்த தாமதம் இல்லாமல் இருந்திருந்தால், முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்ட பாலம் மற்றும் சாலையை நாங்கள் அப்போது கடந்திருப்போம்” என்று அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, காத்மாண்டுவிலிருந்து பொகராவுக்கு செல்லும் வழியில் பொலிஸார் இந்தக் குழுவினரைத் தடுத்து நிறுத்தினர்.
அந்த நேரத்தில், சுமார் 600 அடி கீழே மக்கள் ஓடி ஒளிந்து கொண்டிருப்பதை அக்குழுவினர் பார்த்தனர். அடுத்த சில வினாடிகளிலேயே பெரும் வெள்ளப்பெருக்கு அந்தப் பகுதியில் இருந்த கட்டடங்களை முழுவதுமாக அடித்துச் சென்றது, அந்த இடம் சமவெளியாக மாறியதை அவர்கள் நேரில் கண்டனர்.
அதன் பிறகு, பாதுகாப்பான இடத்தை நோக்கி இரவு முழுவதும் கடினமான பாதையில் அக்குழுவினர் சென்றனர். அடிப்படைத் தேவைகளைக் கூட கவனிக்க முடியாமல், சரியான உணவும் இன்றி அந்த இரவை அவர்கள் கழித்தனர்.
பின்னர், வெள்ளத்தில் பலர் உயிரிழந்த செய்தி அறிந்தபோது, தங்கள் சிரமங்கள் மற்றவர்களின் துயரத்தை காட்டிலும் மிகவும் சொற்பமானது என உணர்ந்தனர்.
கொச்சி விமான நிலையத்தில் பயணிகள் தங்கள் குடும்பத்தினரைச் சந்தித்தபோது உணர்ச்சிபூர்வமான காட்சிகள் அரங்கேறின. பலர் கண்ணீர் மல்கத் தங்களது உறவினர்களைக் கட்டியணைத்துக் கொண்டனர்.
