மலேசியாவின் ஜாலான் காப்பாம் பெம்ப்பான் பெட்ரோனாஸ் நிலையம் அருகே நேற்றிரவு நிகழ்ந்த கோர விபத்தில், இருசக்கர வாகனங்களில் சென்ற பல்கலைக்கழக மாணவரும் லொறி ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
நேற்றிரவு மணி 11.30 அளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில்UiTM லெண்டு கிளைப் பல்கலைக்கழக மாணவரான முஹம்மது தொரிக் தானி அகமத் அசாம் (21) மற்றும் லோரி ஓட்டுநரான முகமட் சாம்சூல் மாட் ஹாலிஃப் (41) ஆகிய இருவருமே பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இவ்விபத்து குறித்து விளக்கிய ஜாசின் மாவட்ட காவல் துறைத் தலைவர், பெம்பானில் இருந்து ஆயர் கெரோ நோக்கிய திசையில் தொரிக் ‘யமஹா லெஜண்டா 110Z’ இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளார். அதேவேளையில், எதிர்த்திசையில் ‘ஹோண்டா டேஷ் 125’ இருசக்கர வாகனத்தை முகமட் சாம்சூல் ஓட்டி வந்துள்ளார்.
முன்னால் சென்ற ஒரு வாகனத்தை முந்திச் செல்ல சாம்சூல் முயன்றபோது, அவரது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்திசைப் பாதைக்குள் நுழைந்து தொரிக்கின் வாகனம் மீது நேருக்கு நேர் மோதியதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இம்மோதலில் இருவரின் தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என உறுதி செய்யப்பட்டது. உயிரிழந்தவர்களின் உடல்கள் உறவினர்களின் அடையாள உறுதிப்படுத்தலுக்குப் பிறகு, பிரேதப் பரிசோதனைக்காக ஜாசின் மருத்துவமனை தடயவியல் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
