புதுவருட கொண்டாட்டத்திற்காக கொழும்பில் இருந்து தனது வீட்டிற்கு வந்த இளைஞர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கூரிய ஆயுதம் ஒன்றினால் குத்திப் படுகொலை செய்யப்பட்டார். அத்துடன் மற்றோர் இளைஞர் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வட்டுக்கோடை தொல்புரத்தைச் சேர்ந்த கோணேஸ்வரன் மயூரன் (வயது 27) என்பவரே உயிரிழந்தவராவர்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
ஒரே ஊரை சேர்ந்த இரண்டு இளைஞர்களுக்கிடையே கடந்த 2021ஆம் ஆண்டு முதல் முறுகல் நிலை காணப்படுகிறது. இந்நிலையில் உயிரிழந்த இளைஞர் கொழும்பில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் புதுவருட கொண்டாட்டத்திற்காக நேற்றையதினம் வீட்டுக்கு வந்துள்ளார்.
இதன்போது மீண்டும் முறுகல் ஆரம்பமானது. இதன்போது இரண்டு தரப்பிலிருந்தும் இருவர் இருவராக நால்வருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதன்போது உயிரிழந்த நபர் கத்தியால் குத்தியவேளை மற்றையவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து காயமடைந்த நபர் நக்கிள்ஸ் மூலம் கத்தியால் குத்தியவரை நெஞ்சில் தாக்கிய நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
