வடமேற்கு நேபாளத்தில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேசிய நில அதிர்வு திணைக்களத்தின் தகவலின்படி, உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.51 மணியளவில் 4.5 ரிச்டர் அளவில் முதல் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து அதிகாலை 4.28 மணியளவில் 4.2 ரிச்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் மையப்புள்ளி முகு மாவட்டத்தின் கலாய் பகுதிக்கு அருகில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்க அதிர்வுகள் அண்டை மாவட்டங்களான டோல்பா மற்றும் ஜும்லா ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளன. எனினும், நிலநடுக்கங்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் தொடர்பான உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
நில அதிர்வு அபாயம் அதிகமுள்ள மண்டலத்தில் அமைந்துள்ள நேபாளத்தில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்படக்கூடிய பின்அதிர்வுகள் மற்றும் கட்டமைப்புச் சேதங்கள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதேவேளை, கடந்த செப்ரெம்பர் 26ஆம் திகதி திபெத்–நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், சுமார் 5,000 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ள நிலையில், தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.
