Colombo (News 1st) மன்னார் – புதுக்குடியிருப்பு உயிலங்குளம் பகுதியில் பொலிஸ் அதிகாரிகளை தாக்கிய சம்பவம் தொடர்பில் 10 பேர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு – உயிலங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸ் அதிகாரிகள் குறித்த இடத்திற்கு சென்றுள்ளனர்.
இதன்போது கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட நபர் குறித்த பகுதியிலுள்ள அவரது வீட்டில் இருந்துள்ளதுடன், பொலிஸார் அவரிடம் வாக்குமூலம் பெற முயற்சித்த போது அங்கிருந்தவர்கள் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த 5 பொலிஸ் அதிகாரிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைகளின் பின்னர் நேற்று(25) வௌியேறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 பெண்கள் உள்ளிட்ட 10 பேரும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக மோட்டார் சைக்கிளொன்றில் பொலிஸ் நிலையத்திற்கு வந்து தகவல் வழங்கிய நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.