நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தார்.
யாழ். கலாசார மத்திய நிலையத்திற்கு சென்ற இந்திய மத்திய நிதியமைச்சர், அங்கு இடம்பெற்ற புத்தாக்க கண்காட்சியை பார்வையிட்டதுடன், மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
அதனைத் தொடர்ந்து யாழ். பொதுநூலகம் உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கும் அவர் விஜயம் மேற்கொண்டிருந்தார்.
யாழ். நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு சென்றிருந்த அவர் அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
இதனிடையே, இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்ட இந்திய பிரதிநிதிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நேற்று நடத்தினர்.
கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பௌத்த உறவுகளை மேம்படுத்துவதற்காக இந்திய அரசாங்கம் வழங்கிய 15 மில்லியன் டொலர் நிதியுதவியின் கீழ், திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான இருதரப்பு ஆவணங்களும் இங்கு பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளன.
2023 ஜூலை மாதத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்தியாவுக்கான விஜயத்தின் போது நிறைவேற்றப்பட்ட பொருளாதார கூட்டிணைவு தொடர்பான ஆவணத்திற்கேற்ப வலய நாடுகளில் விமான, டிஜிட்டல், எரிசக்தி மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதாக இந்திய மத்திய நிதியமைச்சர் இதன்போது உறுதியளித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான மின்சக்தி வேலைத்திட்டம், விமான சேவை மற்றும் மன்னார் எரிபொருள், எரிவாயு ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கான ஒத்துழைப்புகளை வழங்குவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
கடன் மறுசீரமைப்புடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து இந்தியா, இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்தும் ஒத்துழைப்புடன் செயற்படுமென இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.