அன்டார்டிகாவில் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 500-க்கும் மேற்பட்ட பென்குயின்கள் இறந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, ஆஸ்திரேலியாவின் ஃபெடரேஷன் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், பென்குயின்களின் இறப்புக்கு பறவைக் காய்ச்சல் வைரஸ் காரணமாக இருக்கலாம். கடந்த ஒரு சில ஆண்டாகவே இதன் பாதிப்பு அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து அறிய அங்கிருந்து சேகரித்து வரப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்காக ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்நிலையில், பறவைக் காய்ச்சல் தொற்றுநோய் மிக தீவிரமானது. இது கொரோனா தொற்று நோயை விட 100 மடங்கு மோசமாக பரவுகிறது என மருத்துவ நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
2003 முதல் பறவைக் காய்ச்சல் வைரசால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு 100 நோயாளிகளில் 52 பேர் இறந்துள்ளனர். இதனால் இறப்பு விகிதம் 50 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது என உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
அமெரிக்காவின் 4 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தில் மனிதர் ஒருவர் இந்தத் தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.