Colombo (News 1st) நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழையுடனான வானிலை நிலவுகின்றது.
கொழும்பு, திருகோணமலை, குருநாகல், புத்தளம், நீர்கொழும்பு, இரத்தினபுரி, மாத்தளை, கண்டி, பதுளை, நுவரெலியா, கம்பஹா
உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகின்றது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் 100 மில்லிமீட்டர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளைகளில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும் என்பதுடன், மின்னல் தாக்கங்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திறந்த வௌியில் அல்லது மரங்களின் கீழ் நிற்பதைத் தவிர்த்து, கட்டடங்களில் அல்லது மூடப்பட்ட வாகனங்களுக்குள் இருக்குமாறும், வயர்களின் மூலம் இணைக்கப்பட்ட தொலைபேசிகள் மற்றும் மின்சாரத்தில் இணைக்கப்பட்டுள்ள உபகரணங்களை பாவிப்பதைத் தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடும் காற்று வீசும் சந்தர்ப்பங்களில் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து வீழும் அபாயம் காணப்படுவதால், அது தொடர்பில் கவனமாக செயற்படுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசர சந்தர்ப்பங்களில் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளின் உதவியைப் பெற்றுக்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை, பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல, கேகாலை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதற்கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த பிரதேசங்களில் வசிக்கும் மக்களை மிகவும் அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
மண்மேடுகள், கற்பாறைகள் சரிதல், நிலவெடிப்பு, நிலம் தாழிறங்குதல் உள்ளிட்ட அனர்த்தங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.