Colombo (News 1st) 2023 உலகக்கிண்ண தகுதிகாண் கிரிக்கெட் தொடரின் ஸ்கொட்லாந்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 82 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இதன் பிரகாரம், முதல் சுற்றில் பங்கு பற்றிய அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்று சுப்பர் சிக்ஸ் சுற்றுக்கு இலங்கை முன்னேறியுள்ளது.
இந்த தொடரில் முதல் இரண்டு இடங்களை பெறும் அணி உலகக்கிண்ண தொடருக்கு தகுதி பெறும்
B பிரிவில் இலங்கை அணி பங்கு பற்றிய இறுதிப்போட்டி புலவாயோவில் இன்று நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஸ்கொட்லாந்து அணியின் அழைப்பின் பேரில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கையின் முதல் 2 விக்கெட்களும் 43 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டது.
பெத்தும் நிசங்க மற்றும் சதீர சமரவிக்ரம ஜோடி 3 ஆவது விக்கெட்டுக்காக 55 ஓட்டங்களை பகிர்ந்தனர். சதீர சமரவிக்ரம 26 ஓட்டங்களைப் பெற்றார்.
சரித் அசலங்க மற்றும் பெத்தும் நிசங்க ஜோடி 4 ஆவது விக்கெட்டுக்காக 44 ஓட்டங்களை பெற்றனர்.
சிறப்பான ஆட்டத்தை வௌிப்படுத்திய பெத்தும் நிசங்க 75 ஓட்டங்களைப் பெற்றார். சரித் அசலங்க 63 ஓட்டங்களைப் பெற்றார்.
இதன் பிரகாரம், இலங்கை அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 245 ஓட்டங்களைப் பெற்றது.
246 என்ற வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணியின் முதல் விக்கெட்டுக்காக 14 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பெறப்பட்டன.
மெத்திவ் குரோஸ் 7 ஒட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
ஸ்கொட்லாந்தின் முன் வரிசை வீரர்கள் பெரிதும் பிரகாசிக்காத நிலையில், முதல் 4 விக்கெட்களும் 45 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது.
க்ரிஸ் சோல் மற்றும் க்ரிஸ் கரீவ்ஸ் ஆகியோர் 9 ஆம் விக்கெட்டுக்காக 55 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.
இறுதியில், 246 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி, 29 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
போட்டியின் சிறப்பாட்டக்காரரான மஹீஸ் தீக்ஷன 3 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.