Colombo (News 1st) அரிசி, பயறு, உளுந்து, குரக்கன், கௌப்பி மற்றும் நிலக்கடலை ஆகியவற்றை இந்த ஆண்டில் மீண்டும் இறக்குமதி செய்ய தேவையில்லை என விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2022 சிறுபோகத்தில் இருந்து மீண்டும் இரசாயன உரத்தை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டமையின் மூலம் அரிசி உள்ளிட்ட ஏனைய உணவுப் பயிர்களில் நாடு தன்னிறைவான மட்டத்தை அண்மித்துள்ளதாக விவசாயத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில் இரசாயன உரத்திற்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக ஏற்பட்ட நெருக்கடியை அடுத்து, அரிசி உள்ளிட்ட ஏனைய உணவுப் பயிர்களின் இறக்குமதிக்காக பாரிய அளவு நிதி செலவிடப்பட்டதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனிடையே, இந்த சிறுபோக அறுவடையின் பின்னர் பயிரிடப்படும் இடைப்போகத்தின் போது இயலுமான அளவு மேலதிக உணவுப் பயிர்களை பயிரிடுவதற்கு முன்னுரிமை வழங்கி பயறு, கௌப்பி, உளுந்து ஆகியவற்றை பயிரிட விவசாயிகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.