Colombo (News 1st) மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் PET ஸ்கேன் பரிசோதனைகள் இடைநிறுத்தப்பட்டு மூன்று மாதங்கள் கடந்துள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
PET ஸ்கேன் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான மருந்தினை விநியோகிப்பதற்கு சுகாதார அதிகாரிகள் அசமந்தம் காட்டுவதாக சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம குறிப்பிட்டார்.
அந்த மருந்தினை விநியோகிப்பதற்கு விலைமனு கோரல் மூலம் நிறுவனமொன்றுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள போதிலும், அந்நிறுவனம் மருந்தினை இதுவரை வழங்காதுள்ளதாக அவர் கூறினார்.
தற்போது இலங்கையில் தேசிய வைத்தியசாலை மற்றும் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை ஆகியவற்றில் மாத்திரமே PET ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர் சங்கத்தின் தலைவர் சானக்க தர்மவிக்ரம குறிப்பிட்டார்.
மஹரகம வைத்தியசாலையில் PET ஸ்கேன் சோதனைகள் முடங்கியுள்ளதால், தேசிய வைத்தியசாலையில் மாத்திரமே அந்த பரிசோதனை முன்னெடுக்கப்படுவதாகவும் இதன் காரணமாக பெட் ஸ்கேன் சோதனைகளை மேற்கொள்வதற்கு நோயாளர்கள் 06 மாதங்கள் காத்திருக்க வேண்டியேற்பட்டுள்ளதாகவும் அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர் சங்கத்தின் தலைவர் ச்சானக தர்மவிக்ரம சுட்டிக்காட்டினார்.
இந்த விடயம் தொடர்பில் அறிவதற்காக, மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு அழைப்புகளை மேற்கொண்ட போதும், அவர் பதிலளிக்கவில்லை.