Colombo (News 1st) யாழ்ப்பாணம் – கல்வியங்காடு GPS விளையாட்டரங்கிற்கு அருகில், நேற்று முன்தினம்(12) ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து, 4 ஆண்களும் 2 பெண்களும் நேற்று(13) கைது செய்யப்பட்டதாக யாழ்.மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
09 வயதான சிறுமி ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டதாகத் தெரிவித்தே, குறித்த நபர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சிறுமியின் தாயாரும் பெரிய தாயாரும் இணைந்து அந்த நபர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, சிறுமியின் மாமா உள்ளிட்ட நால்வர் இணைந்து அவரை வேறொரு இடத்திற்கு அழைத்துச்சென்று தாக்கியுள்ளனர்.
பின்னர் குறித்த நபர் அவரது வீட்டிலேயே விடப்பட்ட போதிலும், மறுதினம் காலை அந்த குடும்பஸ்தர் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட சிறுமியும் 6 சந்தேகநபர்களும் மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.