Colombo (News 1st) இஸ்ரேல் மீதான ஹமாஸ் அமைப்பின் தாக்குதலின் பின்னர் தவறான தகவல்களை பரப்புவதற்கு X தளம் பயன்படுத்தப்பட்டதாக ஐரோப்பிய ஒன்றியம், எலான் மஸ்கிற்கு (Elon Musk) எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய சட்டங்களின் பிரகாரம் எச்சரிக்கப்பட்ட போதிலும், வன்முறை மற்றும் பயங்கரவாத உள்ளடக்கங்கள் அகற்றப்படவில்லை என Bloc நிறுவனத்தின் தலைவர் ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், ஹமாஸ் அமைப்புடன் இணைந்த வகையில் புதிதாக திறக்கப்பட்ட X கணக்குகளை நீக்க தமது நிறுவனம் நடவடிக்கை எடுத்ததாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
மேலும், வன்முறை என்று கூறப்படுபவற்றை பட்டியலிடுமாறும் எலன் மஸ்க், ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரியுள்ளார்.
அவ்வாறான தவறான தகவல்கள் தொடர்பான விபரங்கள் எதுவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்துறை ஆணையாளரினால் எலான் மஸ்கிற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், உண்மைக்கு புறம்பான, திரிபுபடுத்தப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவதாக பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்துறை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு, பலர் பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்ட பின்னர், அவர் தனது கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.