Colombo (News 1st) இஸ்ரேலில் இடம்பெற்ற மோதலின் போது உயிரிழந்த அனுலா ரத்நாயக்கவின் பூதவுடல், இன்று(25) இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டதன் பின்னர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 3 நாட்களுக்குள் பூதவுடல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மோதலின் போது காணாமல் போன மற்றைய இலங்கை பிரஜையின் மரணத்தை உறுதிப்படுத்தும் வகையில் அவரது 2 பிள்ளைகளின் மரபணு(DNA) மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் கூறியுள்ளார்.
மரபணு மாதிரிகள் நேற்று(24) கொழும்பில் பெற்றுக்கொள்ளப்பட்டன.
ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்த வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட சுமார் 350 பேரின் சடலங்கள் இஸ்ரேல் வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவை அடையாளம் காண முடியாதளவுக்கு கருகிய நிலையிலுள்ளதாகவும் நிமல் பண்டார குறிப்பிட்டார்.
காணாமல் போன இலங்கையரின் சடலம் அவற்றில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த மரபணு மாதிரிகள் பயன்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.