Colombo (News 1st) ஹமாஸ் படைகளால் தாக்கப்பட்டு, ஆடைகள் களையப்பட்டு, கடத்தப்பட்ட ஜெர்மனியை சேர்ந்த 22 வயதான இளம்பெண் ஷானி லவுக் (Shani Louk) உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரது உடல் கண்டெடுக்கப்பட்டு, அடையாளம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.
கடந்த 7 ஆம் திகதி இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காசா முனை பகுதிக்கும் இடைபட்ட எல்லை பகுதியில் ‘சூப்பர் நோவா’ (Super Nova) இசைக்கச்சேரி நடந்து கொண்டிருந்தது. அங்கு திடீரென நுழைந்த ஹமாஸ் அமைப்பினர், 260 பேரை கொன்று, சிலரை பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
சூப்பர்நோவா இசை நிகழ்ச்சியில் ஜெர்மனியை சேர்ந்த ஷானி லவுக் கலந்து கொண்டிருந்தார். ஹமாஸ் படைகள் அவரை கொடூரமாக தாக்கினர். பின்னர் அவரது ஆடைகளைக் களைந்து ஜீப்பின் பின்பகுதியில் வைத்து ஊர்வலமாகக் கொண்டு சென்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, ஷானி லவுக்கின் தாய் Ricardo Louk தனது மீட்டுத்தருமாறு பாலஸ்தீன மக்களிடமும் அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதன்போது, பாலஸ்தீனம் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், காசாவில் உள்ள மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் ஷானி சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த தகவல் பொய் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
இஸ்ரேல் இராணுவ வீரர்கள் அண்மையில் மண்டை ஓடு ஒன்றை கண்டெடுத்தனர். அதனை மரபணு பரிசோதனை செய்தபோது, அது ஷானியின் மண்டை ஓடு என்பது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து ஷானி லவுக் உயிரோடு இல்லை என்று இஸ்ரேல் இராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தகவலை ஷானியின் உறவினர்களும் உறுதி செய்துள்ளனர்.