Colombo (News 1st) பாராளுமன்ற செயற்குழுக்களின் அமர்வுகளில் வௌிநபர்களை அழைப்பதற்கு சபாநாயகரின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் தற்போது இயங்கும் பல்வேறு செயற்குழு அமர்வுகளுக்காக அதன் உறுப்பினர்கள், செயற்குழு தலைவரின் முறையான அனுமதியுடன் வருகை தரும் குழு உறுப்பினர் அல்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள், அந்த செயற்குழுக்களின் செயற்பாடுகளுக்காக அழைக்கப்படும் நிறுவன அதிகாரிகள், அதன்போது அழைக்கப்படும் பாராளுமன்ற பணியாளர்கள் ஆகியோருக்கு மாத்திரமே சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நபர்கள் தவிர்ந்த ஏனைய நபர்கள் அல்லது வௌிநபர்களுக்கு செயற்குழு அமர்வுகள் இடம்பெறும் சந்தர்ப்பங்களில் செயற்குழு அறைக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது என சபாநாயகர் அறிவித்தார்.
பாராளுமன்ற பணியாளர்களுக்கு மேலதிகமாக குழுக்களின் தலைவர்களினால் குழுவின் பணிகளில், ஒருங்கிணைப்பு மற்றும் ஆலோசனைப் பணிகளுக்காக ஏதேனும் வெளிநபர்களின் சேவையை தன்னார்வமாகவோ அல்லது வேறு ஏதேனுமொரு வகையிலோ பெற விரும்பினால், அதற்கு சபாநாயகரின் எழுத்துமூலமான முன் அனுமதியைப் பெறவேண்டும் என சபாநாயகர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் கௌரவம், அபிமானம் என்பவற்றுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சமநிலையாகவும் குழுவினால் அனுமதிக்கப்படும் விடயங்கள் தொடர்பில் மாத்திரம் ஊடக அறிக்கைகளை வெளியிடுமாறும் சபாநாயகர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் கடிதங்களைக் கையாளும் போது சம்பந்தப்பட்ட குழுக்களின் பெயர்கள் அடங்கிய உத்தியோகபூர்வ கடிதத் தலைப்புகள் சம்பந்தப்பட்ட குழுக்களினால் அனுமதிக்கப்பட்ட விடயங்களைத் தொடர்பாடல் செய்வதற்கு மாத்திரம் பயன்படுத்தப்பட வேண்டும் என சபாநாயகர் குறிப்பிட்டார்.