Colombo (News 1st) 40 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சா தொகை யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது.
யாழ்.காரைநகர் சாம்பலோடை கடற்கரைப் பகுதியில் கடற்படையினரால் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த கேரள கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கரையோரத்தில் புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 51 கஞ்சா பொதிகள் கடற்படையினரால் இதன்போது மீட்கப்பட்டுள்ளன.
101 கிலோ 750 கிராம் எடையுடைய குறித்த கஞ்சா பொதிகள், 40 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியானவை என மதிப்பிடப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடல்சார் பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான சோதனை நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.