Colombo (News 1st) சுனாமியின் பின்னர் மீண்டும் அவ்வாறான பேரழிவை எதிர்கொள்ள பல்வேறு முன்னாயத்த திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன.
சுனாமி எச்சரிக்கை கோபுரங்களும் அவற்றில் ஒன்றாகும்.
19 ஆண்டுகளின் பின்னர் இந்தக் கோபுரங்களுக்கு என்ன நடந்துள்ளது?
அமெரிக்க சிக்னல் கோப்பரேஷன் என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் அறிவுரைகளைப் பயன்படுத்தி நாடளாவிய ரீதியிலுள்ள கடலோரப் பகுதிகளில் 77 சுனாமி எச்சரிக்கை கோபுரங்கள் ஸ்தாபிக்கப்பட்டன.
சுனாமி போன்ற அனர்த்தங்களின்போது மக்களுக்கு முன்அறிவித்தல் வழங்கி அதற்கேற்ப பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லும் வகையில் இந்த கோபுரம் வடிவமைக்கப்பட்டது.
காலி மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட 8 சுனாமி எச்சரிக்கை கோபுரங்களில் 2 மாத்திரமே தற்போது செயற்படுகின்றன.
குறித்த கோபுரங்களின் ரிமோட் கண்ட்ரோல் பழுதடைந்துள்ளதால், கோபுரத்திற்கு அருகில் சென்று செயற்படுத்த வேண்டியுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
காலி அஹங்கம ஷாரிபுத்ர மகா வித்தியாலய வளாகத்தில் ஸ்தாபிக்கப்பட்ட இந்த கோபுரம் இடிந்து வீழ்ந்து தமது பிள்ளைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துமா என்ற அச்சத்தில் பெற்றோர்கள் உள்ளனர்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 9 சுனாமி எச்சரிக்கை கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒரு கோபுரம் மாத்திரமே இயங்குகிறது.
இது தொடர்பில் ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலாளர் நாம் வினவும் வரை நிலைமையை அறிந்திருக்கவில்லை.
பின்னர், மீண்டும் எம்முடன் தொடர்பு கொண்ட அவர், இலங்கையில் இது வழமையான நிலைமை எனவும் இது தொடர்பில் இடர் முகாமைத்துவ நிலையத்திற்கு அறிவித்ததாகவும் கூறினார்.
மாத்தறை மாவட்டத்தில் உள்ள 7 சுனாமி எச்சரிக்கை கோபுரங்களும் முற்றாக செயலிழந்துள்ளன
கிழக்கு மாகாணத்தின் கிண்ணியா, நிந்தவூர் பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கோபுரங்களும் செயலிழந்துள்ளன.
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இடர் முகாமைத்துவ நிலையத்திடம் இருந்து BBC சிங்கள சேவை தகவல் கோரியுள்ள நிலையில், நாட்டில் நிறுவப்பட்டுள்ள 77 சுனாமி எச்சரிக்கை கோபுரங்களில் 57 கோபுரங்கள் தற்போது முற்றாக செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்திலிருந்து 11 கோபுரங்களை இயக்க முடியும் என்பதுடன் மேலும் 9 கோபுரங்களுக்கு அருகில் சென்றால் மாத்திரமே இயக்க முடியும்.
இந்த கோபுரங்கள் தொடர்பான தொழில்நுட்பம் காலாவதியாகியுள்ளதால் அவற்றை தயாரித்த நிறுவனம், அதன் உபகரண தயாரிப்பையும் நிறுத்தியுள்ளது.
எனவே, தொலைபேசி நிறுவனங்களுடன் இணைந்து புதிய வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்த இடர்முகாமைத்துவ நிலையம் தயாராகி வருகின்றது.