Colombo (News 1st) மின் கட்டண அதிகரிப்பு மற்றும் மின் வெட்டுக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, உயர் நீதிமன்றத்தில் இன்று(08) அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகம், மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியோர் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
இலங்கை மின்சார சபை வழங்கிய தரவுகளுக்கமைய 52,000 மில்லியன் ரூபா இலாபம் ஈட்டப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் கூறியுள்ளார்.
அத்துடன் மதிப்பிடப்பட்டதை விட நீர் மின்னுற்பத்தி அதிகரித்தமை மற்றும் மின்சாரத்திற்கான கேள்வி, குறைவடைந்தமையால் 26,000 மில்லியன் ரூபா இலாபம் ஈட்டப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதனை தவிர, மின் அலகொன்றின் விலை 18 வீதத்தினால் அதிகரித்தமையினால் மேலும் 26 மில்லியன் ரூபா இலாபம் ஈட்டப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் அதிகரித்துள்ள மின் கட்டணத்தை குறைப்பதற்கு மின்சார சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குறிபிபிட்டார்.
இந்த நடவடிக்கைகளை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.