Colombo (News 1st) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 5 ஆம் திகதி வவுனியாவிற்கு சென்ற போது எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் தலைவியை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி கடந்த 05 ஆம் திகதி வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற வன்னி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.
இதன்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கோரியிருந்தனர்.
இதன்போது போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் பின்னர் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.
அமைதியின்மை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டதுடன் அன்றைய தினமே ஒருவர் பிணையில் விடுக்கப்பட்டதுடன் வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் தலைவியை 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் இன்று(08) ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் தலைவி நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்டதால் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.