Colombo (News 1st) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகருக்கு இன்று (13) காலை பயணித்தார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்த கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்று உரை நிகழ்த்தவுள்ளார்.
அரசியல், பொருளாதாரம், சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் நிகழ்ச்சி நிரல்களை வடிவமைப்பதற்காக ஆண்டின் தொடக்கத்தில், உலகின் முக்கிய நாடுகள் பங்கேற்கும் கூட்டமே உலக பொருளாதார மன்றமாகும்.
சர்வதேச நிறுவனங்கள், அமைப்புகள், சிவில் சமூகம் மற்றும் கல்வி நிறுவனங்களும் இதில் பங்கேற்று வருகின்றன.
இதேவேளை, சுவிட்சர்லாந்தின் ஆசிய வர்த்தக சம்மேளனத்துடன் இணைந்து இலங்கை முதலீட்டு சபை ஏற்பாடு செய்துள்ள வர்த்தக வட்டமேசை மாநாட்டிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.