New Delhi: இந்தியாவின் 75 ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
‘விக்சித் பாரத்’ அல்லது ‘வளர்ந்த இந்தியா’ எனும் தொனிப்பொருளில் இம்முறை குடியரசு தினம் கொண்டாடப்படுகின்றது.
குடியரசு தின நிகழ்வுகள் தலைநகர் புது டெல்லியில் இன்று நடைபெறுகின்றன.
21 பீரங்கி குண்டுகள் முழங்க குடியரசுத் தலைவரால் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தப்பட்டது.
தேசிய கீதம் இசைக்கப்பட்டதையடுத்து, முப்படைகள் உள்ளிட்ட பல்வேறு படைப் பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மெக்ரோன் கலந்துகொண்டுள்ளார்.
இந்திய மாநிலங்களின் அலங்கார ஊர்தி அணிவகுப்புகளும் பிரான்ஸ் போர் விமானங்களும் குடியரசு தின நிகழ்வுகளை அலங்கரித்தன.
இதனையடுத்து, டெல்லி தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர் மரியாதை செலுத்தினர்.
இந்தியா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றாலும் இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் 1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் திகதியே அமுலுக்கு வந்தது.
இந்த நாளை குறிக்கும் வகையில் குடியரசு தினம் கொண்டாடப்படுகின்றது.
முதன் முறையாக குடியரசு தின அணிவகுப்பு “போருக்கு அழைப்பு” என்கிற போர் முரசு கருவிகள் இசைக்கும் நிகழ்ச்சியோடு ஆரம்பமானது.
பாரதத்தின் 75 ஆவது குடியரசு தின விழா, பெண்களை மையமாகக் கொண்டு கொண்டாடப்பட்ட நிலையில், இந்த போர் அழைப்பு இசை நிகழ்ச்சி பெண்களால் நடத்தப்பட்டதாக இந்திய மத்திய வௌியுறவுத்துறை , கலாசாரத் துறை இணையமைச்சர் மீனாட்சி லேகி தெரிவித்துள்ளார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு 2024 ஆம் ஆண்டிற்காக 132 பேருக்கு பத்ம விருதுகளும் அறிவிக்கப்பட்டன.
இதில் தமிழகத்தின் வைஜெயந்திமாலா, பத்மா சுப்ரமண்யம், மறைந்த நடிகர் விஜயகாந்த், பத்திரப்பன், ஜோஷ்னா சின்னப்பா, ஜோ டி குரூஸ், ஜி. நாச்சியார், சேசம்பட்டி டி.சிவலிங்கம் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.