Colombo (News 1st) ETI வைப்பாளர்கள் ETI நிறுவனத்தில் பணத்தை வைப்பிலிட்டபோது, இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையின் பணிப்பாளர்களாக செயற்பட்ட நபர்களையும் வழக்கின் பிரதிவாதிகளாக பெயரிட்டு அழைப்பாணை அனுப்புமாறு உயர் நீதிமன்றம் நேற்று (20) உத்தரவிட்டது.
ETI நிறுவனத்தில் பணம் வைப்பிலிடப்பட்டமை தொடர்பில் இலங்கை மத்திய வங்கி உரிய கவனம் செலுத்தாமையை சவாலுக்குட்படுத்தி, ETI வைப்பாளர்கள் சங்கம் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு S. துரைராஜா, யசந்த கோதாகொட, அர்ஜூன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய நீதியரசர் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வைப்பாளர்களிடமிருந்து வைப்புக்களை ஏற்றுக்கொள்வதற்கு ETI நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறும் மத்திய வங்கியின் நாணய சபையின் செயலாளருக்கு இதன்போது உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரதிவாதிகள் தமது ஆட்சேபனைகளை ஜூன் 14 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக தாக்கல் செய்ய வேண்டுமென உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
அதற்கு எதிரான ஆட்சேபனைகளை ஜூன் 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், எழுத்துபூர்வ விளக்கத்தினை ஒகஸ்ட் 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தாக்கல் செய்யுமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ETI வைப்பாளர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் முன்னிலையானதுடன், இந்த மனுவை செப்டம்பர் 18 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.