மேற்காசிய நாடான துருக்கியில், கடந்த 2014 இருந்து தற்போது வரை தொடர்ந்து ஜனாதிபதியாக பதவி வகித்து வரும் ,70 வயதுடைய ரிசெப் தாயிப் எர்டோகன் 2023 மே மாதம், அப்போதைய தேர்தலில் வந்த முடிவுகளின்படி 2ஆம் முறையாக ஜனாதிபதியாக பதவியேற்றார்.
துருக்கியின் 12ஆவது ஜனாதிபதியாக தனது 5வருட பதவிக்காலத்தில் எர்டோகன் உள்ள நிலையில், இம்மாத இறுதியில், துருக்கியில் பிராந்திய மற்றும் முனிசிபாலிட்டி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் மேயர்களும், கவுன்சிலர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இந்நிலையில், 2 தசாப்தங்களுக்கும் மேல் பதவியில் இருந்த எர்டோகன், மார்ச் தேர்தல்களை தனது கடைசி தேர்தல் என அறிவித்துள்ளார்.
2003இல் இருந்து 2014 வரை துருக்கியின் பிரதமராகவும், 1994இருந்து 1998 வரை இஸ்தான்புல் (Istanbul) நகர மேயராகவும் இருந்த எர்டோகன், அரசியலில் இருந்து விலகுவது குறித்து தற்போது முதல்முறையாக பேசியுள்ளார்.
எர்டோகன் இது குறித்து தெரிவித்ததாவது.. :
“இது எனது கடைசி தேர்தல் என்பதால், நான் ஒய்வின்றி உழைத்து வருகிறேன்.சட்டம் வழங்கியிருக்கும் அதிகாரத்தின்படி இதுதான் எனது இறுதி தேர்தல். நான் பதவி விலகினாலும் எனது “நீதி மற்றும் வளர்ச்சி கட்சி” அதிகாரத்தில் இருக்கும். வரும் மார்ச் 31 அன்று நடைபெறவுள்ள தேர்தலின் முடிவுகள் எனக்கு பிறகு வரும் சகோதரர்களுக்கு ஒரு ஆசீர்வாதமாக இருக்கும். அதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்து விட்டோம்.”
இவ்வாறு எர்டோகன் கூறினார்.
ஆனால், எர்டோகனின் இந்த அறிவிப்பை நம்ப முடியாது என அவரை சமூக வலைதளங்களில் பயனர்கள் விமர்சித்து வருகின்றனர்.