உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் கத்தோலிக்க திருச்சபைக்கு வழங்கப்பட்டுள்ள விசாரணை அறிக்கையின் முழுமையான பிரதி (காணாமல் போன பக்கங்களுடன் ) விரைவில் கத்தோலிக்க திருச்சபைக்கு வழங்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
88 தொகுதிகள் கொண்ட இந்த முழுமையான அறிக்கை பல குறுந்தகடுகளாக கத்தோலிக்க திருச்சபைக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், சிடிக்களில் உள்ள சில தொகுதிகள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சேதமடைந்துள்ளதாகவும், சிடிக்களை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
“நாங்கள் இந்த அறிக்கையை பேராயரிடம் கொடுக்கவில்லை, ஆனால் கத்தோலிக்க திருச்சபைக்கு வழங்குகிறோம். சுமார் 1,500 பக்கங்கள் இல்லை என்று நம்புவது கடினம். கத்தோலிக்க திருச்சபைக்கு வழங்கப்பட்ட ஈஸ்டர் விசாரணையின் முழு அறிக்கையின் பகுதிகளைக் கொண்ட ஒரு குறுந்தகட்டை திறப்பது கடினமாக உள்ளது.
தொழில்நுட்ப காரணங்களால் அதன் கோப்புகள் அழிக்கப்பட்டிருக்கலாம். இதன் காரணமாக, அந்த தொகுதிகளை சிடிக்களாகக் கொண்ட முழுமையான அறிக்கையை வழங்க எங்கள் சட்டக் குழுக்கள் மீண்டும் செயல்படுகின்றன,” என்று அமைச்சர் கூறினார்.
உயிர்த்த தாக்குதல் தொடர்பான 88 தொகுதிகள் கொண்ட இந்த அறிக்கையின் 1500 பக்கங்கள் காணவில்லை என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் அண்மையில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.