இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கருங்காலி மாலை மீது நம்பிக்கை இல்லையாம். அப்படி இருந்தும் கருங்காலி மாலையை தினமும் அணிய ஒருவர் தான் காரணம் என கூறியிருக்கிறார். இனிமேல் தொடர்பாக பேசியபோது கருங்காலி மாலை பற்றி தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களாக கருங்காலி மாலை பற்றி சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படுகிறது. கருங்காலி மாலை அணிந்தால் என்ன நன்மை, யாரெல்லாம் அந்த மாலையை அணியலாம் என பேசுகிறார்கள். பாசிட்டிவாக இருக்க உதவும் என்பதால் பலர் கருங்காலி மாலை வாங்கி அணிந்திருக்கிறார்கள்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கழுத்திலும் கருங்காலி மாலை இருக்கிறது. அது குறித்து பேட்டி ஒன்றில் கேட்டதற்கு லோகேஷ் கனகராஜ் கூறியதாவது,
லியோ படத்திற்கு பிறகே கருங்காலி மாலை பற்றி நிறைய விளம்பரங்களை பார்த்தேன். விக்ரம் பட ஷூட்டிங்கில் இருந்து காரில் வந்தபோது சிறு விபத்தில் சிக்கினேன். இதையடுத்து என் நண்பர் ஒருவர் கருங்காலி மாலையை என் கழுத்தில் போட்டு, இது நெகட்டிவிட்டியை குறைக்கும் என்றார்.
எனக்கு கருங்காலி மாலை மீது நம்பிக்கை இல்லை. மேலும் அதை விளம்பரம் செய்ய நான் அணியவில்லை. என் நண்பரின் அன்புக்காக மட்டும் தான் கருங்காலி மாலையை கழற்றாமல் அணிந்திருக்கிறேன் என்றார்.
மாநகரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜை நடிகராக்கிவிட்டார் ஸ்ருதி ஹாசன். ஸ்ருதியின் இனிமேல் இசை வீடியோவில் அவருடன் சேர்ந்து நடித்திருக்கிறார் லோகேஷ். இனிமேல் வீடியோவை பார்த்த ரசிகர்களோ, ரொமான்ஸ் எழுத மட்டும் வராது, ஆனால் ரொமான்ஸ் பண்ண தாராளமாக வரும் போலயே லோகிணா. உங்கள் படத்தில் யாராவது ரொமான்ஸ் செய்தால் கொலை செய்துவிட்டு, நிஜத்தில் பயங்கரமான ஆளாக இருக்கிறீர்களே என்கிறார்கள்.
லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்கிறார்கள் ரசிகர்கள் சிலர். மேலும் சிலரோ இனிமேல் நடிப்பு வேண்டாம் லோகிணா. உங்களுக்கு இயக்கம் தான் சரிபட்டு வரும். இத்துடன் நடிப்பை நிறுத்திக்கொள்ளவும் என்கிறார்கள்.
ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் கேட்டால் லோகேஷ் கனகராஜால் நோ சொல்ல முடியவில்லை. கமல் ஹாசனின் வெறியன் என்பதால் ஆண்டவரின் தயாரிப்பு நிறுவனம் கேட்டதும், ஓகே சொல்லி இனிமேல் வீடியோவில் நடித்திருக்கிறார்.
நாம் இதுவரை நடித்ததே இல்லை. நடித்துப் பார்க்கலாமே என்கிற ஆவலாலும் நடித்திருக்கிறார். விஜய்ணா கோட் படப்பிடிப்புக்காக கேரளா சென்ற கேப்பில் இந்த லோகேஷ் செய்த காரியத்தை பார்த்தீங்களா?. சென்னை திரும்பியதும் இனிமேல் வீடியோவை பார்த்து விஜய்ணா எப்படி எல்லாம் ஷாக் ஆனாரோ, சிரித்தாரோ தெரியவில்லையே என்கிறார்கள் ரசிகர்கள்.