இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போரில் ஹவுதி கிளர்ச்சி படைகள் அதிரடியான தாக்குதலை செங்கடலில் நிகழ்த்தி வருகின்றனர். இதற்கு பல்வேறு நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மோதல் போக்கு முடிவுக்கு வந்தபாடில்லை. இந்த சூழலில் இஸ்ரேல் கடலில் இருந்து நடத்திய தாக்குதல் பேசுபொருளாக மாறியுள்ளது.
சர்வதேச அளவில் பதற்றம் ஏற்படுத்தி வரும் ரஷ்யா – உக்ரைன் இடையிலான நீண்ட போரைத் தொடர்ந்து, இஸ்ரேல் – ஹமாஸ் இடையில் கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி போர் வெடித்தது.
இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து ஹமாஸ் படையினர் செய்த அத்துமீறலால் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அதன்பிறகு இஸ்ரேல் ராணுவம் இடைவிடாது தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் காஸா பகுதியில் உள்ள அப்பாவி மக்கள் பலரும் கொல்லப்பட்டனர்.
உருக்குலைந்த காஸா
இப்பகுதியில் இருந்த உள்கட்டமைப்பு வசதிகள் பெரிதும் சேதமடைந்துள்ளன. அடிப்படை வசதிகள் ஏதுமின்றி தவிக்கும் காஸா மக்களுக்கு பல்வேறு நாடுகளும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்த சூழலில் ஹமாஸ் படைகளுக்கு தனது முழு ஆதரவை ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சி படைகள் தெரிவித்தன. குறிப்பாக செங்கடலை ஒட்டி ஏமன் அமைந்துள்ளதால், அதில் வரும் இஸ்ரேல் ஆதரவு நாடுகளின் கப்பல்கள் மீது ஹவுதி படைகள் அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
செங்கடல் வழியிலான வர்த்தகம் என்பது சர்வதேச கடல் வர்த்தகத்தில் மிகவும் முக்கியமானது. ஆசியா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு இடையில் ஏற்றுமதி, இறக்குமதிக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கிறது. இந்நிலையில் ஹவுதிகளின் தாக்குதல் செங்கடல் வழியாக செல்லும் சரக்கு கப்பல்களை பாதித்துள்ளது. மாற்று வழிகளையும், ஏற்பாடுகளையும் நோக்கி நகர்ந்து வருகின்றனர். இதில் ட்ரோன் தாக்குதல் பெரிய தலைவலியாக மாறியுள்ளது.
ஐரோப்பிய யூனியன் பாதுகாப்பு
இதற்கிடையில் செங்கடலில் பாதுகாப்பு அளிப்பதற்காக ஐரோப்பிய யூனியனின் கடற்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கோபத்தில் ஏமனிற்குள் நுழைந்து ஹவுதி படைகளின் முகாம்கள் மீது அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது கவனிக்கத்தக்கது. இந்த சூழலில் இஸ்ரேல் தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளது.
இஸ்ரேல் ராணுவம் அதிரடி
செங்கடலில் இருந்து இஸ்ரேலின் துறைமுக நகரான எய்லாட்டிற்கு அருகில் வந்த ட்ரோன்கள் அடையாளம் கண்டு கொண்ட ராணுவத்தினர், கடலில் இருந்தே ஏவுகணைகளை ஏவி தூள் தூளாக்கி இருக்கிறது. காஸா உடன் போர் தொடங்கியதும், கடற்பகுதியில் கண்காணிப்பை இஸ்ரேல் தீவிரப்படுத்தியது.
கடலில் இருந்தே பதிலடி
ஏவுகணை கப்பல்களை ஆங்காங்கே நிறுத்தி வைத்து எச்சரியாக செயல்பட்டு வந்தது. அதில் C-Dome எனப்படும் கப்பலில் இருந்து பாய்ந்த ஏவுகணை தான், செங்கடலில் இருந்து வந்த ட்ரோன்களை தாக்கி அழித்ததாக சொல்லப்படுகிறது. C-Dome என்பது ரஃபேல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட போர் கப்பல். இது நடுவானில் தாக்குதலை தடுத்தி நிறுத்தி அழிக்கும் வல்லமை கொண்டது. குறுகிய தூர பதிலடி தாக்குதல்களுக்கு பயன்படுத்தலாம்.
ட்ரோன்கள் அழிப்பு
இதுதொடர்பாக இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள தகவலில், இரவில் ட்ரோன்கள் வட்டமடித்த படியே வந்துள்ளன. இதை கவனித்து IDF Sa’ar 6 கிளாஸ் கார்வெர்ட்டே கப்பலில் இருந்து புறப்பட்ட ஏவுகணை ஆனது, கிழக்கு பகுதியில் இருந்து வந்த ட்ரோன்களை தாக்கி அழித்தது. தற்போது எந்த பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்துள்ளது.