புதிய திரிபுகளுடனேயே தற்போதை டெங்கு வைரஸ் பரவுவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் ஹம்சக்க விஜேமுனி தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் பரவிய டெங்கு வைரஸூடன் ஒப்பிடுகையில் தற்போதைய புதிய வைரஸில் பல மாற்றங்கள் காணப்படுவதாக அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டார்.
இந்த புதிய மாற்றங்களைக் கொண்ட வைரஸ் இதற்கு முன்னர் இலங்கை மக்களுக்கு தொற்றியிருக்கவில்லை என்பதால், பெருமளவிலானோருக்கு இந்த புதிய டெங்கு வைரஸ் தொற்றக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் என்ற ரீதியில் எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் அதேவேளை பொதுமக்களும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என கோரினார்.
பொதுவாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை இவ்வாறானதொரு நிலைமை ஏற்படுவதை நாங்கள் அறிந்திருந்தோம். ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் இவ்வாறு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், நாங்கள் ஆரம்பத்திலிருந்தே ஓரளவிற்குத் தயாராகவே இருந்தோம்.
ஆனால், இம்முறை உள்ள வைரஸில் சில மாற்றங்கள் காணப்படுகின்றன. எப்போதும் தொற்றும் வைரஸை விட மாறுபட்ட ஒரு வைரஸுடன்தான் இம்முறை நோய் பரவுகிறது.
இந்த வைரஸ் இலங்கையில் உள்ள பெரும்பாலானோருக்கு இதற்கு முன்னர் தொற்றியிருக்கவில்லை என்பதால், இம்முறை அதிகளவிலானோருக்கு நோய் தொற்றும் சாத்தியக்கூறுகள் உள்ளன.
நாங்கள் தற்போது நுளம்புகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும், வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களின் நிலைமை தீவிரமடையாமல் அவர்கள் குணமடைந்து வீடு திரும்புவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பில் அரசாங்கத்தை விட பொதுமக்களுக்கே அதிக பொறுப்பு உள்ளது. எங்கள் தரப்பில் எங்களால் செய்யக்கூடிய அதிகபட்ச விஷயங்களை நாங்கள் செய்வோம் என்று பொதுமக்களுக்கு உறுதியளிக்கும் அதேவேளை, நீங்களும் உங்கள் தரப்பில் செய்யக்கூடிய அதிகபட்ச பங்களிப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
