ஆஸ்திரேலியாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகே சரிந்து விழுந்த கட்டடம்

ஆஸ்திரேலியா சிட்னி நகரின் மையப்பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகே கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இருவர் படு காயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

திங்கட்கிழமை முற்பகல் 11 மணி அளவில் ‘அல்டிமோ’ (Ultimo) பகுதியில் இடிபாடு ஏற்பட்டதாக அவசர உதவிப் பிரிவினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், சுவரும் கூரையும் இடிந்து அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார்களின் மீது விழுந்திருப்பதைக் கண்டறிந்தனர்.

இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 60 மற்றும் 30 வயதுடைய இருவர் மீட்கப்பட்டு, ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் சிட்னியிலுள்ள ‘செயின்ட் வின்சென்ட்’ (St Vincent’s) மருத்துவமனைக்கும், மற்றொருவர் ‘றோயல் பிரின்ஸ் ஆல்ஃபிரட்’ (Royal Prince Alfred) மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.

மேலும் ஐந்து பேரை மருத்துவக் குழுவினர் பரிசோதித்த நிலையில், அவர்களுக்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

விபத்துக்குள்ளான கட்டடம் ஒரு கட்டுமானப் பகுதி என்பதை ‘நியூ சவுத் வேல்ஸ் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையின்’ பதில் கண்காணிப்பாளர் பீட்டர் முர்ரே உறுதிப்படுத்தினார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, எரிபொருள் நிரப்பு நிலையம் உட்பட சுற்றியுள்ள கட்டடங்களில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

“அந்தக் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில், அதன் இடிபாடுகள் எரிபொருள் நிரப்பு நிலையப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சில கார்களின் மீது விழுந்துள்ளன,” என்று அவர் கூறினார்.

“மேலும் கட்டடங்கள் ஏதேனும் இடிந்து விழும் அபாயம் உள்ளதா என்பதை ஆய்வு செய்து, அப்பகுதியின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தீயணைப்பு வீரர்கள் இன்னமும் சம்பவ இடத்திலேயே முகாமிட்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கையாக அங்குள்ள ‘ஷெல்’ எரிபொருள் நிரப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது,” என்றும் அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles